முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று மட்டும் 19 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். அதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை நேற்று அறிவித்தது. பல்வேறு இடங்களில் படிப்படியாக கட்டுப்பாடுகள் அதிகமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் நேற்று(ஏப்ரல் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களிலும், முகக்கவசம் அணிந்து வருகிற வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது, மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்பப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களிலும்” நோ மாஸ்க், நோ பெட்ரோல்” என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
�,