�
இன்று நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க விரும்பவில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில் கொரோனா தொற்றுள்ளவர்கள் வாக்களிக்க ஏதுவாக மாலை 6 மணி முதல் 7 வரை முழு கவச உடை அணிந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையுடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும், அவர்கள் விரும்பினால் தபால் வாக்கு கூட அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 153 பேர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே மாவட்டத்தைச் சேர்ந்த 320 நபர்கள் பிற மாவட்டத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் தொகுதியில் 19 நபர்களும், ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் 13 நபர்களும், உத்திரமேரூர் தொகுதியில் 10 நபர்களும், ஆலந்தூர் தொகுதியில் 52 நபர்களும் என 94 நபர்கள் தங்களை வீட்டிலே தனிமைப்படுத்தி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 8,991 நோயாளிகளில் 17 பேர் மட்டுமே வாக்களிக்க விரும்புவதாகவும், மீதமுள்ளவர்கள் தங்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வாக்களிக்க விரும்பவில்லை எனவும் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட தொகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட 94 பேர்களில் ஒருவர்கூட வாக்களிக்க விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
�,