மகர நெடுங்குழைக்காதன் கோயில் தேரோட்டம் நடத்த உத்தரவு!

public

தூத்துக்குடி தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதன் கோயிலின் தேரோட்டத்தை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ஏப்ரல் 5ஆம் தேதி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பேரையில் உள்ள மகர நெடுங்குழைக்காதன் திருக்கோயில், 108 திவ்ய தேசங்களில் 53வது தலமாக உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா தொடங்கி தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு தேர்த் திருவிழாவும் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்ற நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு வழங்குவது கடினம் என்பதால் தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தேரோட்டம் தேர்தலைக் காரணம் காட்டி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை ரத்து செய்து, தேரோட்டம் நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(ஏப்ரல் 2) நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்த்திருவிழாவை நடத்தக் கோரி மார்ச் 3ஆம் தேதி அறநிலையத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. காவல்துறை பாதுகாப்பு வழங்க முடியாது என்ற காரணத்தை ஏற்க முடியாது. இது பக்தர்களின் வழிபாட்டு உரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் தேர்தல் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதால் பாதுகாப்பு வழங்க முன்னர் மறுத்ததாகவும், தற்போது ஒத்துக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றியும், உரிய காவல்துறை பாதுகாப்புடனும் கோயில் தேரோட்டத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி நடத்தும்படி கோயில் நிர்வாகம், காவல்துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

**வினிதா**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *