பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான கால அவகாசம் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கடந்தாண்டு ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் அனைவரும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். அப்படி இணைக்கவில்லையென்றால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் மக்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக கடைசி நாளான நேற்று பொதுமக்கள் பலரும் இணையதளத்தில் குவிந்தனர். ஒரே நேரத்தில் அனைவரும் முயற்சி செய்ததால், வருமான வரித் துறை இணையதளம் முடங்கிவிட்டது.
இணையதளம் முடங்கியதால் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க முடியாது என்பதால் அபராதம் கட்ட வேண்டுமே என்று மக்கள் பயத்தில் இருந்தனர்.
இந்நிலையில், அதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று நோயால் ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தற்போதைய வருமான வரிச் சட்டத்தின்படி ஆதார் கார்டுடன் பான் எண் இணைக்கப்படாவிட்டால் அந்த பான் கார்டு செயலிழந்ததாக அறிவிக்கப்படும். செயலிழந்த பான் கார்டுகளை 2021 ஜூலை 1ஆம் தேதிக்கு மேல் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
�,