திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய விதிமுறைகளை திடீரென்று அமல்படுத்தியுள்ளது. இதனால் திருமலைக்குச் செல்லவிருந்த பக்தர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் திருமலை திருப்பதியில் புதிய விதிமுறைகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தரிசன டிக்கெட் பெற்று நடைபாதை மார்க்கத்தில் திருமலைக்கு வர விரும்புபவர்கள் 24 மணி நேரத்துக்கு முன்பே செல்ல அனுமதிக்கப்படுவர். அடுத்த நாளுக்கான தரிசன டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்கள் மதியம் 1:00 மணிக்கு மேல் மட்டுமே வாகனங்கள் வாயிலாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.
ஆனால், இதுகுறித்து முன்னறிவிப்பு இல்லாததால் பக்தர்கள் பலர் வழக்கம் போல் நேற்று முன்தினம் (மார்ச் 29) காலை திருமலைக்குச் செல்ல அலிபிரி சோதனைச் சாவடியில் குவிந்தனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நேற்று (மார்ச் 30) செவ்வாய்க்கிழமைக்கான தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மதியம், 1:00 மணிக்கு மேல் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், சோதனைச் சாவடியில் வாகனங்கள் வரிசையில் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
**-ராஜ்**
.�,