கோவை மாவட்டம் வால்பாறையில் தேர்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்ட 3 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் நாகராஜன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் முதல் செலவின பார்வையாளர்கள் வரை தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகிற வேளையில், சில அதிகாரிகள் பணியில் அலட்சியம் காட்டியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வால்பாறை தொகுதியில் ராம்கிருஷ்ண கேடியா தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வால்பாறை தொகுதியில் தேர்தல் செலவினம் குறித்து அறிக்கை ஒன்றை சரிபார்க்குமாறு, வடக்கு வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத், குமரவேல் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அறிக்கை அளித்து 2 மணிநேரமாகியும் அதை சரிப்பார்க்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நாகராஜனிடம் தேர்தல் செலவின பார்வையாளர் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
**வினிதா**
�,