இன்று முதல் 25ஆம் தேதிவரை தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் தென்காசி, விருதுநகர், தேனி, திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால், தென்காசி மாவட்டத்தில் நடவு செய்யப்பட்டிருந்த நெல் சாகுபடி பெரும் பாதிப்புக்குள்ளாகின. ஒரு அடி உயரமுள்ள நெல் பயிருக்கு மேலே இரண்டடி உயரத்துக்கு வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகிப்போனது.
தற்போது, மழை நீர் வற்றிய நிலையில் கடந்த இருநாட்களாக விவசாயிகள் நெல் நாற்று விலைக்கு வாங்கி பாதிக்கப்பட்ட வயலில் மீண்டும் நடவுசெய்து வருகின்றனர்.
இந்த நிலையில் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 25ஆம் தேதிவரை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி சிவலோகம், சித்தார்-2 பகுதியில் 2 செமீ மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஏற்கனவே தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்து நீர்நிலைகளில் தண்ணீர் போதியளவில் உள்ளது. மீண்டும் மழை பெய்தால் மழை நீர் வயல்களிலேயே தேங்கும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர். கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலுக்கு மழை பெய்து குளிர்விக்காதா என பொதுமக்களும், மானாவாரி சாகுபடி விவசாயிகளும் மழையை வரவேற்கத் தயாரானாலும் குறிப்பிட்ட பகுதியில் நெல் சாகுபடி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
**-சக்தி பரமசிவன்**
�,