ஒரே இடத்தில் பணியாற்றுவோர் இடமாற்றம்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்யக் கோரிய மனு குறித்து ஒருவாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணப்பாறையைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல்செய்திருந்தார். அதில்,” ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள விதி. ஆனால், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் வேளாண் துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுபவர்களை இடம் மாற்ற செய்யவில்லை. இதுகுறித்து கடந்த ஜனவரி 15ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தேன். ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை “ என கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று(மார்ச் 15) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது, மனுவில் குறிப்பிட்டுள்ள அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஒருவாரத்திற்குள் பரீசிலித்து முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
வினிதா