கோவை: ரயில் மோதி யானை படுகாயம்!

மதுக்கரை அருகே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி படுகாயமடைந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள வாழையாறு ஆற்றில் நீர் அருந்துவதற்காக யானைகள் வந்து செல்வதுண்டு. அங்கிருக்கும் ரயில்வே தண்டவாளங்களைக் கடந்துதான் யானைகள் நீர் அருந்த செல்ல வேண்டும்.
அதுபோன்று, நேற்றிரவு ஆண் யானை ஒன்று வாழையாறு ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு தண்டவாளத்தை கடக்கும்போது திருவனந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் யானை மீது மோதியது.
இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் மதுக்கரை வனச்சரகர் சீனிவாசன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தண்டவாளத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் கிடந்த யானையை சோதனையிட்டதில், தலை, கால் மற்றும் பின்பகுதியில் அடிபட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்திலேயே யானைக்கு சிகிச்சை அளித்தனர். வேறு இடத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயிலில் மோதி யானைகள் அடிபடுவதும் ,உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுகுறித்து வனத்துறையினர் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ரயில்களின் வேகத்தைக் குறைத்து மெதுவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வினிதா