விடிய விடிய கோயில்களில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழா!


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத மஹா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மஹா சிவராத்திரி விழாவையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழக்கம்போல் அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது.
மஹாசிவராத்திரி விழாவையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு முதல் கால பூஜையும். 12.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், 1.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடந்தது.
ஒவ்வொரு கால பூஜையின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் இணைந்து தாணுமாலையா மூர்த்தியாக சுசீந்திரத்தில் அருள்பாலிக்கும் இக்கோயிலிலும் மஹாசிவராத்திரி வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார் பட்டித்தெருவில் பிரபலமான பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளாக சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது பிரபலமானது பக்திபூர்வமானது.
இந்த ஆண்டு மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் வளாகத்தில், இந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள்(86) மூதாட்டி மற்றும் கோயில் பூசாரிகள் எரியும் விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட்டு, அதில் வெல்லம் கலந்த அரிசி மாவினால் செய்யப்பட்ட அப்பங்களை கொதிக்கும் நெய்யில் போட்டு கரண்டியை பயன்படுத்தாமல் வெறும் கையால் எடுத்து சுற்றி நின்றிருந்த ஏராளமான பக்தர்களை வியக்க வைத்தனர்.
கொதிக்கும் நெய்யை எடுத்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விட்டு அப்பத்தை பிரசாதமாக வழங்கினார் மூதாட்டி முத்தம்மாள். மஹா சிவராத்திரி அன்று முத்தம்மாள் கடந்த 52 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக 40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுடுவதாக தெரிவித்தார்.
பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவில் உள்ள ஜம்புலிங்கேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வியாழக்கிழமை இரவுமுழுவதும் நடந்த சிறப்பு பூஜைகளில் .
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்மனை தரிசனம் செய்தனர்.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோயிலில் சிறப்பு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. பிற பஞ்சபூத தலங்களான திருவண்ணாமலை ,சிதம்பரம் ,காஞ்சிபுரம் ,காளஹஸ்தியிலும் தென்மாவட்டங்களில் பிரபலமான பஞ்சபூத சிவாலயங்களான தாருகாபுரம் சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூர் தென்மலை தேவதானம் சிவாலயங்களிலும் பக்தர்கள் மஹா சிவராத்திரி வழிபாடு நடத்தினர்.
_சக்தி பரமசிவன்