பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்களை கற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என ஏஐசிடியூ தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளில் சேர வேண்டுமானால் பனிரெண்டாவது வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கட்டாயம் படித்திருக்க வேண்டும். இதில் கணிதத்தில் பெறும் மதிப்பெண்ணில் 50 சதவிகிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் பெறும் மதிப்பெண்களில் தலா 25 சதவிகிதம் என்ற அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். தற்போது பொறியியல் படிப்பில் சேருவதற்கான புதிய நடைமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வரையறுத்துள்ளது.
2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கை குறித்த விவர குறிப்பேட்டை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி, இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கல்வி தகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதில், “இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், பயோ டெக்னாலஜி, வேளாண்மை, வணிகம், தொழில்முனைவு, தொழிற்கல்வி ஆகிய பாடங்களில் ஏதாவது மூன்றை படித்திருந்தாலே பொறியியல் படிப்புகளில் சேரலாம்.
அத்துடன் கணிதம், இயற்பியல் பாடங்களை பனிரெண்டாவது வகுப்பில் படிக்காதவர்களுக்கு இணைப்பு பாடம் ஒன்று நடத்தப்படும். பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் பொதுபிரிவினர் 45% மதிப்பெண்ணும், பட்டியல் இனத்தவர் 40% மதிப்பெண்ணும் எடுத்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இந்த புதிய நடைமுறையின் மூலம் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டில் கல்லூரியை விட்டு நிற்கும் மாணவர்களுக்கு புதிய கல்விக்கொள்கையின் படி திறன் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் அனைத்து பொறியியல் படிப்புகளுக்கும் கணிதம் ஒரு அடித்தளம் என்றிருக்கும் நிலையில், இந்த புதிய முடிவுக்கு கல்வியாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் பல லட்சம் மாணவர்கள் இன்ஜினியர்களாக வெளியேறுகிறார்கள். இவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கின்ற நிலையில், புதிதாக கொண்டுவரப்பட்ட நடைமுறையால், இன்ஜினியரிங் படிப்பின் தரம் கேள்விகுறியாகியுள்ளது.
**வினிதா**
�,