மாஸ்க் அணியாதவர்களுக்கு 6 மாதம் சிறை!

நீலகிரியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சில கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதாலும், முகக்கவசம் அணியாமல் செல்வதால்தான் கொரோனா தொற்று அதிகரிக்கிறது என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரியில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா கூறுகையில், ” நீலகிரிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவினால் அதனை கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும். அதனால், கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் வகையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதமும், பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். கொரோனா விதிமுறைகளை கண்காணிக்க 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 30,68,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
வினிதா