மீன் உணவில் குழம்பு, வறுவல், புட்டு என்று பல வகைகள் இருப்பதுபோல மீன்களிலும் கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன் என்று பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நீர்நிலைகளிலிருந்தும் கிடைக்கும் மீனுக்கென்று தனிப் பெயர்களும், தனி ருசியும் உண்டு. இந்த கணவாய் (கடம்பா) மீன் கடலில் கிடைக்கும் வகையைச் சேர்ந்தது. வித்தியாசமாக என்ன சமையல் செய்யலாம் என்று யோசிப்பவர்கள் இந்தக் கணவாய் மீன் வறுவல் செய்து அசத்தலாம்.
**என்ன தேவை?**
கணவாய் (கடம்பா) மீன் – 300 கிராம்
இஞ்சி – பூண்டு விழுது – இரண்டு டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
கறிவேப்பிலை – 15 இலைகள்
தக்காளி – ஒன்று
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தழை – தேவையான அளவு
பெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாதூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
வெங்காயம், தக்காளி, மல்லித்தழையை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். கணவாய் மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலத்தூள், மஞ்சள்தூள், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயைவிட்டு காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். பின்னர் அதில் ஊறவைத்த கணவாய் மீன் கலவையைப் போட்டு கலந்து மூடியால் மூடி விடவும். (அடுப்பு நெருப்பையும் மிதமான அளவில் விடவும்) 20 நிமிடங்களில் கணவாய் வெந்து விடும். சட்டியில் உள்ள நீர்த்தன்மை முழுவதும் வற்றி எண்ணெய் பிரிந்து உதிரி உதிரியாக வரும்போது மல்லித்தழையும் சேர்த்து ஒரு நிமிடம் மூடி இறக்கி பரிமாறுங்கள்.
**[நேற்றைய ரெசிப்பி: மீன் சாப்ஸ்!](https://www.minnambalam.com/public/2021/03/10/1/fish-chops-kitchen-keerthana)**�,