விருதுநகரில் மக்களின் சாலை மறியல் போராட்டத்தினால் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை ஏடிஎஸ்பி மூட உத்தரவிட்டார்.
விருதுநகர் அருகே உள்ள பாவாலி கிராமத்தில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த ஊரில் கோயில் மற்றும் பள்ளிகள் உள்ள பகுதியில், புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடையை மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவ்வூர் மக்கள் மனு கொடுத்துள்ளனர். மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், 200க்கும் மேற்பட்ட மக்கள் சந்திரகிரிபுரம் விலக்கு அருகில் விருதுநகர் அழகாபுரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாட்சியர் சிவஜோதி சம்பவ இடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் மதுக்கடை திறக்கப்படாது என உறுதியளித்த பிறகு மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து மதுக்கடையை திறக்கும் முயற்சிகள் நடைபெறுவதைக் கண்ட மக்கள், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தமுறை சம்பவ இடத்துக்கு வந்த ஏடிஎஸ்பி மரியராஜ் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மதுக்கடையை பூட்டுமாறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மதுக்கடையை மூடிய பின்னர், மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
**வினிதா**
�,