கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் எந்தவித தளர்வுகள் இன்றி கடுமையான வகையில் பின்பற்றப்பட்டன.
அதன்பின் பொருளாதார முன்னேற்றம், மக்கள் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. அக்டோபர் மாதத்துக்குப் பிறகு ஓரளவுக்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டு, மாதந்தோறும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது. இது மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கெரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து, தற்போது ஆறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில் கண்காணிப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டியது அவசியம் என்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலக்கை விரைவுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
**-ராஜ்**�,