தமிழகச் சட்டமன்ற தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்படும் அனைத்து விவிபிஏடி ஒப்புகைச் சீட்டுக்களையும் எண்ண வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடைபெறும் தேர்தலின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த விவிபிஏடி எனப்படும் ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலின் போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டுக்களை முழுமையாக எண்ணும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அதில் கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளில் மட்டுமே விவிபிஏடி இயந்திரங்கள் மூலம் வாக்கு எண்ணப்பட்டதாகவும், மொத்தமுள்ள 541 மக்களவை தொகுதிகளில், 342 தொகுதிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகைச் சீட்டுகளுக்கும் இடையில் வித்தியாசம் இருந்தது என்றும் எனவே, மிண்ணனு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட விவிபிஏடி இயந்திர ஒப்புகைச் சீட்டுகள் அனைத்தையும் எண்ண உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (பிப்ரவரி 20) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில், இதுதொடர்பான வழக்கை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் நெருங்கி வரும் தற்போதைய சூழ்நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், உரிய நேரத்தில் இந்த கோரிக்கையை மனுதாரர் எழுப்பலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்,
**-பிரியா**�,