தென்மாநிலங்களில் வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா!


கொரோனா வைரஸ் மாறுபாடு N440K, இந்தியாவில் தென் மாநிலங்களில் "வேகமாக" பரவுகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்று ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சி.எஸ்.ஐ.ஆர்-சி.சி.எம்.பி) தெரிவித்துள்ளது.
சி.எஸ்.ஐ.ஆர்-சி.சி.எம்.பி ஆராய்ச்சியாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா வைரசின் வகைகளைப் பற்றியும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பது குறித்தும் பகுப்பாய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த மையத்தின் இயக்குநர் மற்றும் ஆய்வின் தலைவரான டாக்டர் ராகேஷ் மிஷ்ரா கூறுகையில், “உலகளவில் பல நாடுகளைக் கவலையடையச் செய்யும் நாவல் கொரோனா வைரஸ் வகைகள் இதுவரை இந்தியாவில் குறைவாகவே காணப்படுகின்றன.
அதிக பரவல் விகிதங்களைக் கொண்ட, நோய் எதிர்ப்புச் சக்தியிலிருந்து தப்ப கூடிய வகைகளான, உருமாறிய இ484கே பிறழ்வு மற்றும் என்501ஒய் ஆகிய வைரசுகளும் அடங்கும். இந்த வைரசுகள் மற்றும் பிற புதிய வகை வைரசுகளின் மரபணுக்களைத் தொடர்ச்சியை வரிசைப்படுத்தி நாடு முழுவதும் துல்லியமுடன் அடையாளம் காண வேண்டிய அவசரம் ஏற்பட்டுள்ளது,
இதுமட்டுமின்றி தென் மாநிலங்களில் N440K என்ற புதிய வகை வைரஸ் நிறையப் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் பரவலைச் சரியாகப் புரிந்து கொள்ள உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். துல்லிய மற்றும் சரியான தருணத்தில், உருமாறிய புதிய வகை வைரசுகளைக் கண்டறிவது, அடுத்து ஏற்படும் பேரழிவு விளைவுகளைத் தடுக்க அவசியமானதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.