இந்திய வரலாற்றில் முதன்முறையாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி இருக்கிறது.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 19.95 ரூபாயும் டீசல் விலையை லிட்டருக்கு 17.66 ரூபாயும் உயர்ந்து இருக்கிறது.
சர்வதேசச் சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக தற்போது இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் உயர்த்தி வருகின்றன. இதுபோன்ற விலை உயர்வுக்கு பெட்ரோல் மீது உற்பத்தி வரியாக மத்திய அரசு லிட்டருக்கு 32.90 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 31.80 ரூபாயும் உயர்த்தியதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது. ஸ்ரீ கங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 93.16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மாதம் வாட் வரி 2 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது வாகன ஓட்டிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
**- பிரியா**�,