கொரோனா தடுப்பூசி: 25,000 ‛டோஸ்' வீணானது எப்படி?


தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆளில்லாமல் 25,000 கொரோனா தடுப்பூசி ‘டோஸ்’ வீணானது என்ற குற்றச்சாட்டுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சராசரியாக 20 முதல் 30 சதவிகிதம் பேரே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த கொரோனா தடுப்பூசி முகாமில் இதுவரை தமிழகத்தில் 1 லட்சத்து 97,114 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது இரண்டாவது ‘டோஸ்’ செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி போட பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி மருந்துகளில் நான்கு மணி நேரம் முடிந்த 25,000 கொரோனா தடுப்பு மருந்து ‘டோஸ்’ வீணாகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் முகாமுக்கு வருகிறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதே எங்களது முன்னுரிமை என பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "கொரோனா தடுப்பூசி மருந்துகள் 10 பயனாளிகளுக்குச் செலுத்தும் விதமாக 10 ‘டோஸ்’ கொண்ட மருந்து பாட்டில்களில் வந்துள்ளது. இந்தத் தடுப்பு மருந்து பாட்டில்களை ஒருமுறை திறந்துவிட்டால் அதில் உள்ள 10 ‘டோஸ்’ மருந்தை நான்கு மணி நேரத்துக்குள் 10 பயனாளிகளுக்குப் போட வேண்டும். ‘கோவின்’ செயலி மூலம் மருந்து போடும் நேரம் பயனாளிகளுக்கு தெரிவிக்கப்படும். இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து போட்டுக்கொள்ள 5 பயனாளிகள் மட்டும் வருகின்றனர். அவர்களுக்கு மருந்து போடுவது முறையா அல்லது அடுத்த 5 பேர் வரும் வரை காத்திருப்பதா?
தமிழகத்தில் தற்போது பயனாளிகள் அனைவருக்கும் தடுப்பு மருந்து போடுவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே ஒருமுறை திறக்கப்பட்ட தடுப்பு மருந்து முடிவடைந்தவுடன் அடுத்ததைத் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடைசியில் மீதம் இருக்கும் சில ‘டோஸ்’களைப் பாதுகாக்க முடியாத காரணத்தால் வீணாகியுள்ளது. தமிழக சுகாதாரத்துறையைப் பொறுத்தவரை பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே முன்னுரிமை ஆகும்" என்று விளக்கமளித்துள்ளார்.