நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் சுகாதாரத்துறை மூலம் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஏற்கனவே 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறந்தவுடன் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை 10 மற்றும் வைட்டமின் மாத்திரை 10 வீதம் 20 மாத்திரைகள் வழங்கப்பட்டன.
அதேபோல தற்போது புதிதாகப் பள்ளிக்கு வரும் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 40 லட்சம் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. 19 லட்சம் மாணவர்களுக்கு நாளை (பிப்ரவரி 10) முதல் பள்ளிகளில் இந்த மாத்திரைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்து வருவதாக கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
“தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றைக்குள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் அனுப்பப்படுகிறது.
அதை அனைத்து பள்ளிகளுக்கும் அதிகாரிகள் பிரித்து அனுப்பி விடுவார்கள். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வகுப்பறையில் வைத்து சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன” என்று கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**�,