பட்ஜெட் : கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி!


மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாகக் காகிதமில்லா நிதிநிலை அறிக்கை இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது. 2021-22 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது, “கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போது தடுப்பூசி போடும் பணி நடந்து வரும் நிலையில், தடுப்பூசி வழங்கலுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், “கொரோனா காலகட்டத்தில் 800 மில்லியன் பொது மக்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்பட்டது.
கொரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்க, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் அளவுக்கு அதாவது சுமார் 27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. உலகிலேயே மிக குறைந்த இறப்பு விகிதமாக ஒரு மில்லியனுக்கு 112 பேர் என்ற அளவில் இந்தியாவில் கொரோனா காலத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது.
சுகாதாரத் துறைக்குக் கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவீதம் அதிகமாக 2,23,846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய பெருந்தொற்று காரணமாகச் சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்த போதிலும் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது” என்று குறிப்பிட்டார்