xகதை திருட்டு வழக்கு: ஷங்கருக்கு பிடிவாரண்ட்!

public

கதை திருட்டு வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர், இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் ஆகியோரது நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி நடை போட்ட திரைப்படம் எந்திரன். இதற்கு முன்னதாக 1996ஆம் ஆண்டு இனிய உதயம் என்ற தமிழ் பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா கதை வெளியானது. இந்தக் கதை 2007ஆம் ஆண்டு தித்திக் தீபிகா என்ற நாவலிலும் வெளியானது.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படம் ஜுகிபா கதையைத் திருடி எடுக்கப்பட்டதாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காப்புரிமை சட்டப்படி புகார் அளித்திருந்தார்.

எனது கதையைத் திருடி எந்திரன் திரைப்படத்தை எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காததால் எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில், ஷங்கர் மீதும் கலாநிதி மாறன் மீதும் கிரிமினல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு, இருவரும் எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 2011இல் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை தொடர்ந்து ஷங்கரும் கலாநிதி மாறனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக முறையிட்டனர். இதில் நாங்கள் கதையைத் திருடவில்லை. எனவே ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

இதனிடையே எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். கடந்த 10 ஆண்டுகளாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்து வந்த நிலையில் 2019 ஜூன் 6ஆம் தேதி, தீர்ப்பு வழங்கிய நீதிபதி புகழேந்தி, கலாநிதி மாறன் மீது ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது என்று தெரிவித்தார்.

மேலும் இயக்குநர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது என்றும் கதை ஒரே மாதிரி இருப்பதாகக் கூறி கதைக்கும் படத்துக்கும் உள்ள 16 ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுக் காட்டி அதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாகத் தெரிகிறது. எனவே எழும்பூர் நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த ஷங்கருக்கு எதிரான வழக்கைக் காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்த நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 12ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்தபோது அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் குற்றவியல் விசாரணைக்கு ஷங்கர் ஆஜராகும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் ஜனவரி 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஷங்கரும் ஆஜராகவில்லை, அவரது தரப்பில் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, இயக்குநர் ஷங்கருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ரோஸ்லின் துரை உத்தரவிட்டார். மேலும், விசாரணையை வரும் பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் புகார்தாரர் தரப்பு சாட்சி விசாரணை நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *