சென்னையில் சொத்து வரியை உடனே செலுத்த வலியுறுத்தி வீதி வீதியாக ஆட்டோ பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது தவிர சொத்து உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகிறது. மார்ச் 31ஆம் தேதிக்குள் சொத்து நிலுவையை வசூலிக்க மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி வருவாய்த் துறை மூலம் சொத்து வரி ஆண்டுக்கு இரண்டு முறை வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சொத்து வரி இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை.
தற்போது தொற்று பரவல் குறைந்து இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருவதால் வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிதியாண்டு நிறைவு பெற இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. அதனால் வரி வசூலை தீவிரப்படுத்தி வருகிறார்கள். சொத்து வரி பாக்கி உள்ளவர்கள் பட்டியலை தயாரித்து ஒவ்வொரு பகுதி வாரியாகச் செல்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட பகுதியில் முகாம் போடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
வணிக நிறுவனங்கள், மால்களில் செயல்படும் கடைகளுக்குச் சென்று சொத்து வரி வசூலிக்கும் பணியில் வருவாய் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள், “கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சொத்து வரி வசூல் குறைவாக உள்ளது. மக்களின் வருவாய், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்றவற்றால் சொத்து வரி வசூல் இயல்பான அளவை விட குறைவாக உள்ளது. இதுவரையில் ரூ. 376 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியை உடனே செலுத்த வலியுறுத்தி வீதி வீதியாக ஆட்டோ பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதுதவிர சொத்து உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகிறது. முகாம்களும் நடத்தப்படுகின்றன.
சொத்து வரி செலுத்தாமல் உள்ள நிலுவை தொகைக்கு விதிக்கப்படுகின்ற அபராத வட்டி 2 சதவிகிதத்தில் இருந்து 1.2 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆன்லைன், நெட்வொர்க், இ-சேவை மையம், கூகுள்பே, பேடிஎம் மற்றும் வரி வசூலிப்பவர் மூலம் சொத்து வரியை செலுத்தலாம். மார்ச் 31ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி அபராத வட்டியைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
**ராஜ்**�,