டெல்லி இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய டெல்லியில் ஏபிஜே அப்துல் கலாம் சாலை அருகே ஜிந்தல் ஹவுஸ் பகுதியில் இன்று மாலை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள நடை பாதையில் குண்டு வெடித்ததால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 4 கார்கள் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பு இஸ்ரேல் தூதரகத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் நடந்துள்ளது.
இதுகுறித்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் குவிந்துள்ளனர். இது மிகவும் சக்தி குறைந்த குண்டு வெடிப்பு எனவும், திட்டமிட்ட சதியா அல்லது விபத்தா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து தனிப்பிரிவு போலீசார் கூறுகையில், சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறையினரும் வந்துள்ளனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொள்ளும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் இருந்து 1.8 கி.மீ. தொலைவில் தான், விஜய் சவுக்கில், படைகள் பாசறைக்கும் திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
**- பிரியா**�,”