இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,54,533 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 155 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,53,339 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 15,948 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,03,16,786 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1,84,408 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
மேலும் இந்தியா முழுவதும் 15,82,201 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 19 கோடியே 17 லட்சத்து 66 ஆயிரத்து 871 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 7,81,752 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் அடுத்த மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஊரடங்கு தளர்வுகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தளர்வுகள் குறித்த அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்தும், பிப்ரவரி மாத கட்டுப்பாடுகள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தளர்வுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள சூழலில், இந்தியாவில் உயரும் கொரோனா தொற்று குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
**-ராஜ்**�,