மத்திய அரசு - விவசாயிகள்: 9ஆவது சுற்றும் தோல்வி!


மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான 9ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். கடும் குளிர், மழை ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் மூன்று சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதில்லை என்ற நிலைப்பாட்டில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மத்திய அரசு ஏற்கனவே நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில் இன்று 9ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. அப்போது வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக 9ஆவது சுற்றுப் பேச்சு வார்த்தையிலும் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். கடும் குளிரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதைக் கருத்தில் கொண்டு உள்ளதாகவும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக அடுத்த உத்தரவு வரும் வரை மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.