சத்தீஸ்கரைப் போலவே தமிழகத்திலும் கோவாக்சின் தடுப்பு மருந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க அரசு முன்வர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்து, அதன் முடிவுகள் வெளி வராத நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே , கோவாக்சின் செலுத்திக் கொண்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உள்ளுறுப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவாக்சினை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
முதலில் இந்த தடுப்பூசியைப் பிரதமர் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் அதே வேளையில், கோவாக்சினை அவசர கதியில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரக் கூடாது என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது. கோவாக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த விரும்பவில்லை என சத்தீஸ்கர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 20,000 கோவாக்சின் டோஸ்கள் சென்னை டிஎம்எஸ் வளாகத்துக்கு வந்துள்ளன. நாளை தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடப்படும் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், “சத்தீஸ்கர் மாநில அரசைப் போல,தமிழக அரசும் கோவேக்சின் தடுப்பூசியைத் தவிர்க்க முன்வரவேண்டும். மருத்துவ வல்லுநர்கள், முழு அங்கீகார நிலையை எட்டாத தடுப்பூசிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், மக்களைப் பரிசோதனை எலிகளாக ஆக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென” வலியுறுத்தியுள்ளார்.
**-பிரியா**�,