wஆரம்பத்தில் ஜாவாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதால், இது ஜாவா அரிசி (ஜவ்வரிசி) எனப்பட்டது. இப்போது தமிழ்நாட்டில் 700-க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 90 சதவிகிதம் சேலம், நாமக்கல் வட்டாரத்தில் அமைந்துள்ளன. இந்தியாவில் வங்காளம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவற்றில் ஜவ்வரிசி முக்கிய உணவாக விளங்குகிறது. ஜவ்வரிசியில் விதவிதமான உணவுகளைச் செய்து ருசிக்கிறார்கள் வட இந்தியர்கள். அவற்றில் ஒன்று இந்த ஜவ்வரிசி தயிர் போண்டா.
**என்ன தேவை?**
நைலான் ஜவ்வரிசி – 50 கிராம்
பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு – தலா 2 டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
கடைந்த தயிர் – ஒரு கப்
துருவிய கேரட், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பெருங்காயத்தூள், சர்க்கரை – தலா ஒரு சிட்டிகை
எண்ணெய் – 200 கிராம்
உப்பு – சிறிதளவு
**எப்படிச் செய்வது?**
ஜவ்வரிசியைக் களைந்து ஊறவிட்டுக் கொள்ளவும். பிறகு அதனுடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைக் கலந்து சிறிய போண்டாக்களாக உருட்டவும் (நெல்லி சைஸ்). சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கடைந்த தயிரில் சர்க்கரை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பொரித்த போண்டாக்களைத் தயிரில் ஊறவிட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கேரட் துருவல் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: ஜவ்வரிசி தேங்காய்ப்பால் கீர்!](https://www.minnambalam.com/public/2021/01/14/1/javvarisi-thengaipal-gheer)�,