கிச்சன் கீர்த்தனா: புரொக்கோலி பருப்பு ரசம்

தற்போது மலிவான விலையில் பரவலாகக் கிடைக்கும் புரொக்கோலிக்கு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறனும், எலும்புத்திசுக்களை வலுவடையச் செய்யும் திறனும் உள்ளது. ஆய்வு ஒன்றில், புரொக்கோலியிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் சல்பர் கலவைக்குப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால்தான், புரொக்கோலி சூப்பர் ஃபுட் எனக் குறிப்பிடப்படுகிறது. வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த புரொக்கோலி பருப்பு ரசமும் சூப்பராக இருக்கும்.
என்ன தேவை?
மீடியம் சைஸ் புரொக்கோலி - 1 (பூக்களைத் தனியாகப் பிரித்து வைக்கவும்)
துவரம் பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 1 (கைகளால் மசிக்கவும்)
புளிக்கரைசல் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
ரசப்பொடி தயாரிக்க
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
பூண்டு - 3 பல்
எப்படிச் செய்வது?
துவரம் பருப்பை நன்கு அலசி, மூன்று கப் தண்ணீர் சேர்த்து மிருதுவாகும் வரை வேக வைக்கவும். வெந்த பிறகு தண்ணீர் மிச்சம் இருந்தால் கொட்டிவிட வேண்டாம். ரசத்தில் சேர்த்துக் கொள்ளலாம். புரொக்கோலிப் பூக்களை தண்ணீரில் அலசி, சின்னதாக நறுக்கி வைக்கவும். ரசப்பொடிக்குக் கொடுத்ததை இடித்து வைக்கவும். தக்காளியைப் புளிக்கரைசலுடன் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, சூடானதும், எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, இடித்த ரசப்பொடி, பெருங்காயம் சேர்த்து, சில நிமிடம் வதக்கவும். இதில் புரொக்கோலியைப் போட்டு, சிறிதளவு உப்புத் தூவி சில நிமிடம் வதக்கவும். மூடி போட்டு தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடம் வேக விடவும். இப்போது புரொக்கோலி பாதி வேக்காடு வெந்திருக்கும். மூடியைத் திறந்து வெந்த துவரம் பருப்பு, தக்காளி புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு, அரை கப் தண்ணீர் (பருப்பு வெந்த தண்ணீரை இதில் சேர்க்கலாம்), மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி, தீயை மிதமாக்கி மூடி போட்டு வேக விடவும். ரசம் கொதி வரும் போது மல்லித்தழை சேர்த்து மூடி போட்டு தீயை முற்றிலும் குறைத்து, பத்து நிமிடம் வைக்கவும். பிறகு, அடுப்பை அணைத்து பத்து நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்.