ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. டி.இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்துவருகிறது. ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
கொரோனாவுக்கு முன்பே படத்தின் 40 சதவிகிதப் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது டிசம்பர் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினி அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் வேக வேகமாகப் படப்பிடிப்பை எடுத்துவந்தனர். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நினைத்ததைவிட வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவந்தது. 12 முதல் 14 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்தும் கொண்டார் ரஜினி.
இப்படியான சூழலில் படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதாலும், ரஜினியின் உடல்நிலை சரியில்லாமல் போனதாலும் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது. ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் வந்தது. மருத்துவ ஆலோசனையின்படி சென்னைக்குத் திரும்பியுள்ளார் ரஜினி.
இந்த நேரத்தில், உடல்நிலையை மனத்தில் கொண்டு அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை என்றும் அறிவித்துவிட்டார். இனி, அரசியலில் ரஜினி இல்லை என்பது உறுதியானது, ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியான மனநிலையைக் கொடுத்திருக்கிறது. ஏனெனில், ரஜினியை நடிகராக மட்டுமே ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள். அதோடு ரஜினி எனும் கலைஞனின் உடல்நிலையில் அக்கறை அவசியம் என்பதை, ரசிகர்கள் இணையத்தில் கருத்தாகத் தெரிவிப்பதில் புரிந்துகொள்ள முடிகிறது.
அரசியல் இல்லையென்றாகிவிட்டது, அண்ணாத்த படப்பிடிப்பை எப்போது தொடங்கலாம் என்று பேசிவருகிறது படத்தயாரிப்பு. ஏனெனில், பல கோடி முதலீடு செய்யும் தயாரிப்பு நிறுவனத்துக்குப் படப்பிடிப்பு நின்றால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். அதுவும் படப்பிடிப்பு தொடங்கி, ஷெட்யூல் முடியாமலேயே பாதியில் நின்றால் சிக்கல்தான். கூடுதலாக உடன் நடிக்கும் நடிகர்களின் கால்ஷீட்டை மீண்டும் பெறுவதில் இருந்து, ஷூட்டிங் அனுமதி வரை நிறைய ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். இதையெல்லாம் தாண்டி ரஜினியையும் மனத்தில் கொண்டு, அடுத்த வருட பிப்ரவரியில் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று யோசித்து வருகிறார்கள்.
படப்பிடிப்புக்கு ஹைதராபாத் வரை செல்ல வேண்டாம். அதை சென்னையிலேயே நடத்த செட் பணிகளைத் தொடங்க இருக்கிறது படக்குழு. அதோடு, 75 சதவிகிதப் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகத் தெரிகிறது. மீதி படப்பிடிப்பை பிப்ரவரியிலேயே முடித்துவிட திட்டமாம். நிச்சயம் ரஜினிக்கு ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
**- ஆதினி**�,