சிதம்பரத்தில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த மழையால் நடராஜர் கோயில் உட்பட பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
புரெவி புயல் வலுவிழந்தாலும் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 32 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதனால் சிதம்பரத்தில் உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அண்ணாமலை நகர் பகுதி, வல்லம்படுகை, சிதம்பரம் இந்திரா நகர், ஓமக்குளம் பகுதி, மின்நகர் பகுதி, பைசல் மஹால் பின்புறம் நகர்ப் பகுதி மற்றும் 1ஆவது வார்டு உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெரு குளம் சுற்றியுள்ள சாலையை அரித்த புரெவி மழை #தள்ளாடும்_தமிழகம்#புரெவி_புயல் #Burevi @CMOTamilNadu தொலைநோக்கு திட்டங்கள் இல்லாட்டி இப்படி தான் மழை நீரும் வீணாகும் சாலையும் வீணாகும் pic.twitter.com/o5GFbCn7je
— சீரமைப்போம் தமிழகத்தை (@ReimagineTN) December 4, 2020
சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெரு குளம் சுற்றியுள்ள சாலையை மழை நீர் அரித்துள்ளது.
மழை நீர் வடிய வழியில்லாததால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. நடராஜர் கோயில் குளமான சிவகங்கை குளம் நிரம்பி வழிகிறது.
நடராஜர் வீற்றிருக்கும் சித்சபை பகுதி மற்றும் கோயில் வளாக பகுதி முழுவதும் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தற்போது கோயிலில் இருக்கும் மழை நீரை வடிய வைக்கும் பணியில் கோயில் பொது தீட்சிதர்கள் ஈடுபட்டுள்ளனர். நடராஜர் கோயிலின் வடக்கு கோபுரம் அருகே பூமிக்கு அடியில் உள்ள பெரிய அளவிலான வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய் விட்டதால் தண்ணீர் வடியாமல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**
�,”