�
உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாகப் பொங்கலுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கும் வடமாநில பண்டிகைகள் சிலவற்றுக்கும் மட்டுமே இதுவரை உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முதன்முறையாகத் தமிழர்களின் முக்கியப் பண்டிகையாகக் கருதப்படும் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல், மகர சங்கராந்தி, பிஹூ ஆகிய பண்டிகைகளுக்கு ஜனவரி 14 மற்றும் 15ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுவதாக நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் வருடத்தில் 196 நாட்கள் மட்டுமே செயல்படும். 174 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அது மட்டுமின்றி வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் ஒரு மணி வரை மட்டுமே செயல்படும்.
இந்த சூழலில், மற்ற பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது போல் தமிழர் திருநாளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற பல நாட்கள் கோரிக்கை 2021ஆம் ஆண்டு நடைமுறைக்கு வர உள்ளது. இதனைத் தமிழ் அமைப்புகளும் கட்சிகளும் வரவேற்றுள்ளன.
**-பிரியா**�,