ஓசூர் அருகே லாரியிலிருந்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ரெட்மி செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திர மாநிலத்தில் செல்போன் ஏற்றிச் சென்ற லாரியிலிருந்து 12 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதேபோன்ற சம்பவம் தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது.
சென்னை பூந்தமல்லியில் இருந்து MH 04 JK 8553 பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி மும்பைக்கு நேற்று பல கோடி மதிப்புள்ள ரெட்மி செல்போன்களை எடுத்துச் சென்றுகொண்டிருந்தது. லாரியில் அருண்குமார், சதிஷ் குமார் என்ற தமிழகத்தைச் சேர்ந்த இரு டிரைவர்கள் இருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மேல் மலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் லாரி வந்துகொண்டிருந்த போது, டிரைவர்கள் இயற்கை உபாதையை கழிப்பதற்காக லாரி நிறுத்தப்பட்டுள்ளது.
அப்போது, திடீரென அங்கு 3 லாரிகளில் வந்த கும்பல் டிரைவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு லாரியை கடத்திச் சென்றது. அழகுபாலி என்ற இடத்தில் லாரியை நிறுத்தி அதிலிருந்த 10 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்த அக்கொள்ளை கும்பல், அதனை வேறொரு கண்டெய்னருக்கு மாற்றிவிட்டு தப்பியது.
காயமடைந்த டிரைவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொள்ளையர்களைப் பிடிக்க ஓசூர் டிஎஸ்பி முரளிதரன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் வந்து ஆதாரங்களை சேகரித்தனர். அத்துடன்,
ஆந்திராவில் நடந்த கொள்ளை சம்பவ பாணியிலேயே இந்த கொள்ளையும் நடந்துள்ளதால், அதனை மையமாகக் கொண்டு நெடுஞ்சாலைப் பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து கொள்ளையர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
**எழில்**�,