எஸ்பிபியின் உடலுக்குப் பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி!

public

இசை ரசிகர்களின் மனதில் பேரிடியாய் எஸ்பிபியின் மரணச் செய்தி இன்று வந்து விழுந்தது. இந்நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிபியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்பிபி, இன்று மதியம் 1.04 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில் எஸ்பிபிக்கு கொரோனா இல்லை என்று எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்தது. இதனால் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்க அனுமதிக்கப்பட்டது.

இதனையொட்டி நுங்கம்பாக்கத்தில் அவரது வீடு உள்ள பகுதியில் சுகாதார அதிகாரிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்பிபி உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் எஸ்பிபி ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது வீடு முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருவதைக் காணமுடிகிறது.

எஸ்பிபியின் உடல் வருவதற்கு முன்பே சமுத்திரக்கனி, இசையமைப்பாளர் தீனா, ஆகியோர் அவரின் வீட்டுக்கு சென்று காத்திருந்தார்கள். இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பாடகி அனுராதா ஸ்ரீராம் எஸ்பிபி வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமாரும் இன்று மாலை எஸ்பிபி வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எஸ்பிபி மறைந்தாலும், நம் உள்ளங்களில் என்றுமே அணையா விளக்காகவே திகழ்வார்” என்று தெரிவித்துச் சென்றார்.

இன்று இரவு முழுவதும் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை காலை 11 மணி அளவில் தாமரை பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *