சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் புதிதாக 10 நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் நேற்று ஒப்புதல் வழங்கியது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதி சாஹி உட்பட 54 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மொத்த பணியிடங்கள் 75 ஆகும். 21 நீதிபதிகள் இடங்கள் காலியாக இருந்தன. எனவே வழக்குகளை விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றத்துக்குக் கூடுதலாக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
இதில், உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு உயர் நீதிமன்றம் சில மாவட்ட நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரைத்தது. அதன்படி, உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சாத்திகுமார் சுகுமார குரூப், முரளி சங்கர் குப்புராஜூ, மஞ்சுளா ராஜராஜூ நல்லய்யா, தமிழ்செல்வி டி.வளையபாளையம் ஆகியோரை புதிய நீதிபதிகளாக கொலிஜியம் நியமித்துள்ளது.
இதன்மூலம் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயரவுள்ளது. அதுபோன்று தற்போது 9 பெண் நீதிபதிகள் பணியாற்றி வரும் நிலையில், புதிய நீதிபதிகள் பதவி ஏற்றால் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 11ஆக உயரும்.
அதோடு காலியாக உள்ள மீதமுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், இதற்காக உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வழக்கறிஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
**-கவிபிரியா**
�,”