தமிழக அரசு பணிக்காக டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1, குரூப் 2 ,குரூப் 2 ஏ , குரூப் 4 ஆகிய தேர்வுகளில் 2016ஆம் ஆண்டிலிருந்தே முறைகேடு நடந்தது கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்து அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சிபிசிஐடி கையிலெடுத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தேர்வுக்குப் பணம் பெற்று தேர்ச்சியடைய உதவிய இடைத்தரகர்கள், டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் பிரிண்டிங் ஸ்கேனிங் பணியில் ஈடுபட்டவர்கள் என பலர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். 50 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
சிபிசிஐடி ஐஜி சங்கர் கண்காணிப்பில், எஸ்.பி.விஜயகுமார் தலைமையிலான போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த சூழலில், குரூப் 2 தேர்வை முறைகேடாக எழுதி வருவாய் ஆய்வாளர், தாசில்தார், பதிவாளர்கள், நகராட்சி துணை ஆணையர் என முக்கிய பொறுப்புகளில் பதிவி வகிக்கும் 40 பேர் மற்றும் 10 விஏஓக்கள் கைது செய்யப்படாமல் இருப்பதாகவும், இவர்களைக் கைது செய்ய வேண்டாம் என்று உத்தரவு வந்துள்ளதாகவும் சிபிசிஐடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்துறை செயலாளர் அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராக சுரேஷ் குமார் என்பவர் முறைகேடாக பணியில் சேர்ந்ததும் தெரியவந்துள்ளது.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் மாதம் ஒன்றுக்கு 40 பேருக்கும் ரூ.16 லட்சம் வரை அரசு ஊதியம் வழங்கி வருகிறது. அதோடு, கைது செய்து பணி நீக்கம் செய்யாததால், சீனியாரிட்டி அடிப்படையில் காத்திருப்பவர்கள் இந்த பணி வாய்ப்பை பெற முடியாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட அதிகாரிகள் முறைகேடாகத் தேர்வெழுதி பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சென்னை ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு சிபிசிஐடி டிஎஸ்பி கடிதம் ஒன்றை எழுதியதாகவும், ஆனால் அந்த கடிதத்தின் மீது மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தையே உலுக்கிய டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் இத்தனை மாதங்கள் கடந்தும், ஏன் அவர்களை இன்னும் கைது செய்யாமல் ஊதியம் கொடுக்கிறார்கள்?, எப்படி அவர்கள் வேலையில் தொடர அனுமதிக்கிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
**-பிரியா**�,