சிவகங்கை மக்களவைத் தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இனிவரும் காலங்களில் தான் கொரோனா பாதிப்பு உச்சமடையும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சிவகங்கை எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்துக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், இப்போதுதான் எனக்கு கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமை படுத்திக்கொண்டேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் அனைவரும் மருத்துவ வழிகாட்டுதலை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், கார்த்தி சிதம்பரத்துக்குத் தொற்று உறுதியான நிலையில் அவர் சென்னையில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். நலமாக இருக்கிறார். நான் சிவகங்கை தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான கேள்விகளுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கு அமலுக்கு வந்தது முதல் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து, சிவகங்கை உட்பட பல்லேறு பகுதிகளிலும் நிவாரண உதவிகளை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**
�,