தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்குப் பாதிப்பும், உயிரிழப்பும் இன்று (ஜூலை 18) அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரப் பாதிப்பு நிலவரத்தைத் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதில் ஒரேநாளில் 4,807 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்சமாகப் பாதிப்பு 4,538ஆகவும், உயிரிழப்பு 78ஆகவும் இருந்தது. இன்று அதைவிட பாதிப்பு அதிகமாகப் பதிவாகியுள்ளது.
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒரே நாளில் 4,807 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,65,714ஆக அதிகரித்துள்ளது. இன்று 47,179 மாதிரிகள் உட்பட இதுவரை 18,04,177 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒரே நாளில் 3,049 பேர் உட்பட மொத்தம் 1,13,856 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று தனியார் மருத்துவமனைகளில் 24 பேர் , அரசு மருத்துவமனைகளில் 64 பேர் என மொத்தம் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அதிகபட்ச உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாகத் தமிழகத்தில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 2,403ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தற்போது உள் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சென்னையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்று பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களிலும் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் இன்று 1,219 பேர் உட்பட இதுவரை 84,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் 370 பேருக்கும்,செங்கல்பட்டில் 323 பேருக்கும், மதுரையில் 185 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,