பிரதமர் மோடி, நாட்டின் கொரோனா தொற்று நிலை குறித்து இன்று (ஜூலை 11) டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், நிதிஆயோக்கின் உறுப்பினர், அமைச்சரவைச் செயலாளர் மற்றும் அரசாங்கத்தின் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளின் நிலைமை மற்றும் பல்வேறு மாநிலங்களின் தயார் நிலை ஆகியவற்றை பிரதமர் அப்போது குறிப்பெடுத்து கொண்டார். பொது இடங்களில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சமூக ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை நாம் மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். அத்துடன் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரப்பப்பட வேண்டும் என்றும், தொற்று பரவுவதைத் தடுக்க தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக எந்தவிதமான மெத்தனத்துக்கும் இடமளிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். தலைநகரில் தொற்று நோயை டெல்லியில் முழுமையாகக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதை போல மற்ற மாநில அரசுகளும் இதேபோன்ற அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று மோடி அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும், நோய்த் தொற்று பாஸிட்டிவாக உள்ள இடங்களில் அதிக சோதனை நடத்தவும், இதற்கு தேசிய அளவிலான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.
**-வேந்தன்**�,