Pமீண்டும் முடக்கப்படும் மதுரை

public

சென்னையில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில், மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் மூன்றாவது வாரத்தில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. சென்னையில் இருந்து வெளியேறியவர்களில் பலர் மதுரை மாவட்டப் பகுதிகளுக்கு சென்று சேர்ந்ததால் மதுரை போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை, மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

நாளையோடு மதுரைக்கு முழு ஊரடங்கு முடிய இருக்கிற நிலையில் தற்போதைய நிலவரத்தைக் கருத்தில் கொண்டு மேலும் ஒரு வாரத்துக்கு மதுரைக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், “மதுரையில் தற்போதைய முழு ஊரடங்கின்போது கரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், கரோனா நோய்த்தொற்றினை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் மேலும் 7 நாட்களுக்கு, அதாவது 6.7.2020 அதிகாலை 0.00 மணி முதல் ஜூலை 12 நள்ளிரவு 12.00 மணி வரை பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன்கீழ் நீட்டிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில், எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமிநாசினி ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்திக் கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதையும், தனிமனித இடைவெளியை தவறாமல் கடைபிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *