�
சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நடிகர் ரஜினி காந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் போலீசார் தாக்கியதில் உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகளும், திரையுலக பிரபலங்களும் கண்டனமும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்குக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்தார்.
இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ரஜினி காந்த் ஏன் எந்த கண்டன அறிக்கையை வெளியிடவில்லை என்று ட்விட்டர் வாசிகள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
குறிப்பாகத் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், காவல்துறைக்கு ஆதரவாக ரஜினி பேசியது குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள், வணிகர்கள் இருவரது உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், ரஜினி காந்த், பாதிக்கப்பட்ட ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாகச் சென்னை முன்னாள் மேயரும் ரஜினியின் நண்பருமான கராத்தே தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜெயராஜ் மனைவி, பென்னிக்ஸ் அம்மாவிடம் ரஜினி காந்த் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
**-கவிபிரியா**�,