இந்திய பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பு செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடியவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. அவரை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வருவதற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
நாடு கடத்தப்படுவதற்கு எதிராக விஜய் மல்லையா இங்கிலாந்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் இந்தியா கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், புதன்கிழமை (03/06/2020) இரவு அவர் இந்தியாவிற்கு அழைத்து செல்லப்படுவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்டு விட்டதாகவும், இன்று எந்த சமயத்திலும் மும்பைக்கு கொண்டு வரப்படுவார் எனவும் செய்திகள் ஊடகங்களில் பரவி வந்தன. இது தொடர்பாக வெளிவந்த செய்திகளில் அவருடன் விமானத்தில் சிபிஐ அதிகாரிகளும் ,அமலாக்கத் துறை அதிகாரிகளும் பயணித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
அவர் மும்பைக்கு அழைத்து வரப்பட்ட பிறகு, நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிபிஐ கஸ்டடியில் எடுக்கும் என்றும் அவருக்கு விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியானது.
இதுகுறித்து விஜய் மல்லையாவின் தனிப்பட்ட உதவியாளர் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனத்திற்கு அளித்திருக்கும் பதிலில், மல்லையா இந்தியா அழைத்து வரப்படும் விஷயங்கள் எதுவும் தனக்கு இன்னும் தெரியவில்லை எனவும், இந்தியா அழைத்து செல்லப்படுவது பற்றி தான் கேள்விப் படவில்லை எனவும் புதன்கிழமை இரவு தெரிவித்துள்ளார். விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் ஆனந்த் தூபே, போன் அழைப்புகளுக்கு பதில் கூறவில்லை.
மேலும் தான் இந்தியா அழைத்து வரப்படுவது குறித்த செய்திகள் வெளியானது குறித்த கேள்விக்கு வாட்ஸப்பில் டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு பதில் தெரிவித்திருக்கும் விஜய் மல்லையா, ”அவர்கள் என்ன கூறினார்கள் என்று அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்” என்று பதிலளித்துள்ளார்.
இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறும்போது விஜய் மல்லையா புதன்கிழமை இரவோ அல்லது கூடிய சீக்கிரமோ இந்தியா அழைத்துவர படுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும், செய்திகள் வெளியானது சிபிஐ வெளியிட்ட பழைய அறிக்கையை கொண்டு இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார் .
** – பவித்ரா குமரேசன்**�,