கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 13 நகரங்களின் நிலவரம் குறித்து மாநகராட்சி ஆணையாளர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் ஆகியோருடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் நேற்று (மே 28) ஆலோசனை கூட்டம் நடத்தினார். சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த 13 நகரங்கள் கொரோனா வைரஸால் அதிகம் பாதித்த இடங்களாக கருதப்படுவதாலும், நாட்டின் கொரோனா நோயாளிகளில் 70 சதவிகிதம் பேர் இங்கு இருப்பதாலும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கவனம் செலுத்தப்பட்ட 13 நகரங்களில் மும்பை, சென்னை, புதுடெல்லி, அகமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கொல்கத்தா, ஹவுரா, இந்தூர் (மத்தியப் பிரதேசம்), ஜெய்ப்பூர், ஜோத்பூர், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகியவை உள்ளன.
கொரோனா தொற்று தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
நோய்த்தொற்று உறுதி வீதம், இறப்பு வீதம், இரட்டிப்பு வீதம், 10 லட்சம் பேருக்கு எத்தனை பேர் பரிசோதிக்கப்படுகின்றனர் போன்ற அளவீடுகள், அதிக அபாய காரணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. கொரோனா நோயாளிகளை இணைப்பது, அவர்களின் தொடர்புகள் மற்றும் பரவல் இடங்கள் போன்ற காரணிகள் அடிப்படையில் கட்டுப்பாட்டு மண்டலங்களை வரையறுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் தேவைக்கேற்ப கட்டுப்பாட்டு மண்டலங்களை நன்கு வரையறுக்கப்பட்ட சுற்றளவுடன் எல்லை நிர்ணயித்து, முடக்க கால விதிமுறைகளை அமல்படுத்த முடியும்.
குடியிருப்பு காலனிகள், மாநகராட்சி வார்டுகள் அல்லது காவல் நிலைய பகுதிகள், மாநகராட்சி மண்டலங்கள், நகரங்கள் என தேவைக்கேற்க கட்டுப்பாட்டு மண்டலங்களை மாநகராட்சிகளால் தீர்மானிக்க முடியும் என்றும், பாதிப்பு பகுதிகளை மாவட்ட நிர்வாகத்தினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர் தொழில்நுட்ப தகவல்களுடன் தகுந்தபடி வரையறுக்க வேண்டும் என நகரங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
**-வேந்தன்**�,