அனுமதியின்றி தொழிலாளர்களை அழைத்து செல்ல முடியாது: உ.பி முதல்வர்!

public

ஊரடங்கால் மீண்டும் மாநிலத்துக்குத் திரும்பியிருக்கும் 23 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும், பாதுகாப்பும் வழங்கும் பொருட்டு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை (மே 24) புலம்பெயர் கமிஷன் ஒன்றை அமைத்துள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுகுறித்து கூறுகையில், புதிய கமிஷன் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பை வழங்கும் எனவும், அவர்கள் வேறு ஏதேனும் மாநிலத்துக்கு வேலைக்கு அழைத்து செல்லப்பட்டால் அதற்கு முன்பு இந்த கமிஷனிடம் அனுமதி கேட்க வேண்டி இருக்கும் வகையில் புதிய பாதையை ஊரடங்கு முடிந்ததும் உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உயரதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு யோகி ஆதித்யநாத் இந்த முடிவை அறிவித்துள்ளார். அதோடு, “இந்தத் திட்டம் மூலம் அரசு புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாது. தொழிலாளர்கள் எந்த மாநிலங்களுக்குப் பணிக்காகச் செல்கிறார்கள் என்றும் கண்காணிக்கும். ஒரு தொழிலாளியின் ஆற்றலுக்கான பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளார். இந்தத் திட்டம் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமாக வேலை வாங்கப்பட்டு குறைவான ஊதியம் பெறுவதைத் தவிர்க்க உதவும் என்றும், எந்த மாநில அரசு அவர்களை எதிர்காலத்தில் வேலைக்கு அழைத்துக் கொள்ள நினைத்தாலும் தொழிலாளர்களுக்குப் போதிய இன்சூரன்ஸ் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதன்மூலம் மனிதத்தன்மையற்ற நிலைகளில் இதுவரை சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு இனி பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். “உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் எப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற சூழ்நிலைகளிலும், பாதுகாப்பற்ற தன்மையோடும் பணியாற்றி வந்தனர், குறிப்பாக ஊரடங்கு காலத்தில் பிற மாநிலங்களில் சிரமப்பட்டார்கள் என்பதையும் பார்க்க முடிந்தது. தொழிலாளர்களுக்கு இனி அடிப்படை தேவைகளான உணவு, தண்ணீர், உறைவிடம் ஆகியவற்றை வழங்க விரும்புகிறோம்” என்றும் கூறியுள்ளார்.

கூடுதல் தலைமைச் செயலாளர் அவினாஷ் அஸ்வதி இதுகுறித்து கூறுகையில், “இந்த கமிஷன் குறைந்தபட்ச வேலைவாய்ப்பை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளார். இதற்கான அமைப்பு இன்னும் முழுதாக உருவாக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள், ஊரக முன்னேற்றம் ஆகிய பிரிவுகளிலிருந்து உயரதிகாரிகள் இணைந்து இதை தொடர்வார்கள் என தெரிகிறது.

மாநில அரசு புலம்பெயர் தொழிலாளர்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் திரும்ப மாநிலத்துக்கு அழைத்து வர உள்ளது என்றும் அவினாஷ் அஸ்வதி தெரிவித்துள்ளார். மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் செய்யப்படும் செலவு மாநிலத்தின் பொருளாதாரத்தையும் பொருத்தது. இன்சூரன்ஸ் மற்றும் மற்ற உதவிகள் வழங்கும்போது மாநிலத்தின் பொருளாதாரத்தை கவனிக்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதுவரை 23 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசம் திரும்பி உள்ளதாகவும் அவற்றில் 15 லட்சம் தொழிலாளர்கள் 1,113 ரயில்களில் திரும்பி உள்ளதாகவும், 8 லட்சம் பேர் பேருந்துகளையோ அல்லது வேறு ஏதோ ஒரு வாகனங்களைப் பயன்படுத்தியோ மற்றும் பலர் வெறும் கால்களுடன் நடந்து வந்து சேர்ந்திருக்கின்றனர் என்ற அவினாஷ் அஸ்வதி, இன்னும் 200 ரயில்களில் புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும் 1,300 ரயில்களில் மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

** – பவித்ரா குமரேசன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *