வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட உச்ச உயர் தீவிர புயலான ஆம்பன் புயல் இன்று (மே 20) காலை ஒடிசாவில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. .
தற்போது மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்துக்கு இடையே கரையை கடக்க துவங்கியுள்ளது ஆம்பன் புயல். இதனால் காற்றின் வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக உள்ளது. வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயரக்கூடும். மதியம் 2.30 மணியளவில் கரையை கடக்கத் தொடங்கிய நிலையில், புயல் கரையை கடக்க 4 மணி நேரம் ஆகும். ஒடிசாவை பொறுத்தவரை பத்ராக் மற்றும் பாலசோர் மாவட்டங்களில் சுமார் 2-3 மணி நேரத்திற்கு புயலின் தாக்கம் இருக்கும் என்று என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆம்பன் புயல் கோரத்தாண்டவத்தால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்கம்பங்களும் சாய்ந்து சேதமடைந்துள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவின் நாற்பது அணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவின் தலைவர் எஸ்.என்.பிரதன், தொற்றுநோய் மற்றும் இயற்கை பேரழிவு என இரட்டை சவால்களை சமாளிப்பதாக கூறியுள்ளார்.மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவிலிருந்து 4 .5 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.
வங்கதேசத்தில் இரண்டு மில்லியன் மக்கள் தற்போது வரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆம்பன் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் புயல் காரணமாக 64 மீனவ கிராம மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை
*-பவித்ரா குமரேசன்*�,