கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்தியாவில் மாஸ்க் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலத்தில் தேவையான மாஸ்க் இருப்பதாகவும், 1.5 கோடி மாஸ்க் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாஸ்க் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன், ”பருத்தி துணியைப் பயன்படுத்தி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய அளவில் வீட்டிலேயே மாஸ்க்குகளை தயாரிப்பதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளார்.
அந்த வழிமுறை அறிவிப்பில், இரட்டை அடுக்கு பருத்தி துணியால் மாஸ்க் தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருக்கும் பயன்படுத்தாத காட்டனால் ஆன பனியன் மற்றும் கைக்குட்டை ஆகியவற்றால் மாஸ்க் தயாரிக்கலாம். மாஸ்க்கை தயாரிப்பதற்கு முன்னதாக, உப்பு கலந்த வெந்நீரில் 5 நிமிடங்கள் ஊற வைத்து, வெயிலில் காயவைத்து பின்னர் தயாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வாய், மூக்கு பகுதிக்குத் தேவையான அளவு துணியை எடுத்துக் கொண்டு, மடித்துத் தைக்க வேண்டும் என ஒவ்வொரு வழிமுறையும் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. இதனை [இந்த](https://www.thehindubusinessline.com/resources/article31219835.ece/binary/FINAL%20MASK%20MANUAL.pdf) லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
இப்படித் தயாரிக்கப்படும் மாஸ்க் மூலம் வைரசை விட மிகக் குறைவான அளவு கொண்ட கிருமிகளும் உள் புகுவதை தடுக்க முடியும். இந்த மாஸ்க்கை தயாரித்து அதன் பிறகு சுத்தமாகத் துவைத்து பின்னர் பயன்படுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் மேற்குறிப்பிட்ட செய்முறையை கொண்டு தனி நபர்களும் தொண்டு நிறுவனங்களும் முக கவசங்களைத் தயாரித்து அனைவரையும் பயனடையச் செய்யலாம். அனைவரும் மாஸ்க் அணிய தொடங்கினால் வைரஸ் பரவல் தடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,