பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ் அப்பில், வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் மற்றும் ஐடி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் வீடுகளிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு வேலை செய்பவர்கள் பலரும் ப்ராட் பேண்ட் கனெக்ஷனைக் காட்டிலும், மொபைல் டேட்டாவையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மொபைல் டேட்டா வேகம் குறைந்துள்ளதாக செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்தது. மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், தான் வாட்ஸ் அப் வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேரத்தையும் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து WhatsApp beta info, வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் 15 நொடிகளுக்கு மட்டுமே வைக்க முடியும், 16 நொடிகளாக இருந்தாலும் கூட வைக்க முடியாது. வாட்ஸ் ஆப் சர்வர் தங்குதடையின்றி இயங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று முதல் வாட்ஸ் அப்பை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். தற்போது அனைவரும் வீட்டில் இருக்கும் காரணத்தினால் பலரும் வீடியோ ஸ்டேட்ஸ் வைக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இணைய வேகக் குறைபாட்டைத் தவிர்ப்பதற்காக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், யூட்யூப் உள்ளிட்டவை தங்கள் வீடியோ ஸ்ட்ரீமிங்கை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**�,