கொரோனாவால் உலகின் பல நாடுகளும் முடங்கியுள்ளன. இதற்குப் பிரிட்டனும் விதிவிலக்கல்ல.இந்த வைரஸால் பிரிட்டன் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிட்டனின் கேபினட் அமைச்சர் மைக்கேல் கோவ், மார்ச் 29ஆம் தேதி பிபிசி செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஜூன் வரையிலும்கூட இந்த கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் அதிக அளவிலான மக்கள் பிரிட்டனில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டுப் பிரதமரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போதைய நிலையில் அங்கு 1200க்கு மேற்பட்ட மக்கள் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர் .
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் போது, அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த உத்தரவு மூன்று வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் லண்டனின் இம்பீரியல் காலேஜ் விரிவுரையாளர் மற்றும் அரசுக்கு அறிவுரைகள் வழங்கி வரும் தொற்றுநோயியல் நிபுணர் நீல் பெர்குசன், சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில் நோயைக் கட்டுக்குள் கொண்டு வர இன்னும் சில மாதங்கள் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் எனவும், மே அல்லது ஜூன் துவக்கம் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், மேலும் 3 மாதங்களுக்கு 144 தடை நீட்டிக்கப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில் அதற்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 7லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
**-பவித்ரா குமரேசன்**�,