ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக நாட்டில் மின் உபயோகமும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக நாடு முழுவதும் மின் உபயோகமும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
பிரதமர் அறிவித்த மூன்று வார ஊரடங்கு உத்தரவு நாட்களில் மூன்றாம் நாளான கடந்த 27ஆம் தேதி இந்தியாவின் மின்சார பயன்பாடு 2.56 பில்லியன் யூனிட்டாக இருக்கிறது. மார்ச் 25ஆம் தேதி நிலவரப்படி 2.78 பில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது மார்ச் முதல் மூன்று வாரங்களில் ஒரு நாளைக்குச் சராசரியாகப் பயன்படுத்தப்பட்ட 3.45 பில்லியன் யூனிட்டுகளை விட 20 சதவிகிதம் குறைவாகும். இந்த குறைவான மின் நுகர்வு தொடர்ந்தால் இந்தியாவின் மின்சார நுகர்வு அக்டோபர் மாதத்திலிருந்து மிக வேகமாக வீழ்ச்சியடையும். ஏற்கனவே பொருளாதார மந்த நிலை காரணமாகக் கடந்த 12 ஆண்டுகளில், தற்போது மின் நுகர்வு சரிந்திருந்த நிலையில் மேலும் குறைந்திருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ஒரு சில மாநிலங்களைப் பொறுத்தவரை, அதிக வெப்பம் காரணமாக மின் நுகர்வு அதிகரித்திருக்கிறது. ”வெப்பம் காரணமாக குடியிருப்பு வாசிகளிடையே மின் நுகர்வு அதிகரித்துள்ளது” என்று உத்தரப் பிரதேச பவர் கார்ப் லிமிடெட் தலைவர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலும் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. கனிம மற்றும் நிலக்கரி சுரங்கம் ஆகியவை அமைந்துள்ளதால் இங்கு மின் தேவை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மின் உற்பத்தி மாநிலங்களான மகாராஷ்டிரம் மற்றும் தமிழ்நாட்டில் மின்சார நுகர்வு 26 சதவிகிதத்துக்கும் அதிகமாகச் சரிவைக் கண்டுள்ளது. குஜராத்தில் 43 சதவிகிதம் குறைந்துள்ளது.
அதன்படி, ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் கடந்த 4 மாதங்களில் முதல் முறையாக 2.78 பில்லியன் யூனிட்டாக மின் நுகர்வு குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-கவிபிரியா**�,