மக்கள் வெளியே வந்தால் சுட உத்தரவிட நேரிடும்: முதல்வர்!


நாடு முழுவதும் கோரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மீறுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிட வேண்டியிருக்கும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் 144 தடை அமலில் இருக்கிறது. இதனை மீறுவோர் மீது 2005ஆம் ஆண்டு பேரிடர் நிர்வாகச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. அதனையும் மீறி சாலைகளில் மக்கள் அச்சமின்றி பயணம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு பயணிப்போரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழகத்தில் இந்த நோயின் தொற்று குறித்து எவ்வளவு எடுத்துரைத்தாலும் மக்கள் சீரியஸ்னசை புரிந்துகொள்வதில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறும் பொதுமக்களுக்கு தெலங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ் கண்டிப்புடன் கூடிய எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவை மீறும் பட்சத்தில் கண்டதும் சுட உத்தரவிட நேரிடும், ராணுவத்தை இறக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
நம் நிலைமையை நாமே மோசமாக்கிக் கொள்ளக் கூடாது. மக்கள் புரிந்து செயல்பட வேண்டும். இந்த பிரச்சினையை உணர்ந்து மக்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தெலங்கானாவில் 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிபிரியா